top of page

அகத்தின் அமைதிமிகு விடுதலை

அது அக்டோபர் 2, 2018 — காந்தி பிறந்த நாள், மற்றும் ‘தமிழகத்தின் கறுப்புக் காந்தி’ என்று அழைக்கப்படும் காமராஜர் மறைந்த நாள். என் பெயருக்குக் காரணமானவர் அவர். அன்றுதான் என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியா வந்திறங்கினேன்.


ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நாளான அக்டோபர் 2, 2025 அன்று மீண்டும் திரும்பியிருக்கிறேன்.


இந்த ஏழு ஆண்டுகளில் — 🎬 மனதைத் தொடும் கதைகளைச் சொல்லும் திரைப்படப் பயணம், 🪶 என் உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்துப்பணி, மற்றும் 💫 பிறரும் நானும் வளர உதவும் வழிகாட்டுதல் — இவை அனைத்தும் அன்பு, செய்யும் தொழிலின் திறமை மற்றும் மேன்மை என்ற இரண்டு பிரிக்க முடியாத மதிப்புகளில் வேரூன்றியவை.

இந்த பயணத்தைக் கொண்டாடுவதற்கும், என் நோக்கத்தின் தூய்மையை ஆழப்படுத்துவதற்கும், நான் அக்டோபர் 7, 2025 அன்று காந்திகிராமத்தில் தொண்ணூற்றொன்பது வயதான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுடன் உரையாடினேன். மக்கட் சேவையே அவரது வேதம்.


ree

காந்திகிராமம், மகாத்மா காந்தியின் கிராமியத் தன்னிறைவுக் கனவால் ஈர்க்கப்பட்ட டாக்டர் டி.எஸ். சௌந்தரம் மற்றும் டாக்டர் ஜி. ராமச்சந்திரன் ஆகியோரால் 1947-ல் நிறுவப்பட்டது. இந்தக் கனவை நனவாக்க உதவியவர்களில் காந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான சங்கரலிங்கம் ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் பின்னர் தங்கள் வாழ்க்கையை நிலச் சீர்திருத்தத்திற்கும் கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்தனர். கல்வி, உழைப்பின் மேன்மை மற்றும் சமூக நலம் ஆகிய அனைத்தும் உண்மையான விடுதலைக்கான ஒரே இயக்கமாக இணைந்த காந்தியின் இலட்சியங்களுக்கு காந்திகிராமத்தை அவர்கள் ஒரு வாழும் உதாரணமாக மாற்றினார்கள்.


விடுதலைக்கான நடைபயணம்


தன் கணவர் ஜெகந்நாதனுடன் இணைந்து, இந்த மண்ணின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவர் நடந்தார், நடந்துகொண்டே இருக்கிறார். ஏழை, ஒடுக்கப்பட்ட பெண்கள் தன்மானத்துடன் வாழ, தலா இரண்டு ஏக்கர் நிலம் தானமாகத் தருமாறு நிலச்சுவான்தார்களின் இதயங்களைத் தொட்டு வேண்டும் பயணம்.


வினோபா பாவே போன்ற ஆன்மிகப் பெருமகன்களுடன் அவர் வாழ்ந்து பணியாற்றினார். காந்தியின் கருணை விளக்கை இந்தியாவின் கிராமங்களுக்கு ஏந்திச் சென்றவர் வினோபா. வினோபா தினமும் அதிகாலை 2:10 மணிக்கு எழுந்து, பிராத்தனை செய்து, தன் நாள் முழுவதுமான நடைப்பயணத்தைத் தொடங்குவார் என்று கிருஷ்ணம்மாள் கூறினார். அது எதிர்ப்பிற்கான பயணம் அல்ல; மனசாட்சியைத் தட்டியெழுப்பும் பயணம்.

மாலை வந்ததும், கிருஷ்ணம்மாள் அவரிடம் ஏதாவது சாப்பிடச் சொல்லி மன்றாடுவார். வினோபா புன்னகைத்துச் சொல்வார்,

“பகவத் கீதையின்—கண்ணனின் புனித வார்த்தைகளால்—என் வயிறு வெடித்துவிடும் அளவுக்கு நிறைந்துள்ளது. எனக்கு உணவு தேவையில்லை.” பிறகு உறங்கச் சென்றுவிடுவார்.


ree

தன் வாழ்நாளில் காலணிகளே அணியாத அந்த மெலிந்த மனிதர், வினோபா பாவே, எளிமை, பணிவு மற்றும் ஆன்மிக ஒழுக்கத்தின் மெளனமான முன்மாதிரிகளில் ஒருவராக இன்றும் விளங்குகிறார். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் மூலம், அவர் சேவையின் உயிருள்ள விதைகளை விதைத்தார் — அவை காகிதத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் அல்ல; அவரது செய்தியாகவே மாறிய வாழ்க்கைகள்.

இந்தக் கதைகள் என் இதயத்தைக் கொள்ளையடித்து, என்னை சிந்தனையில் ஆழ்த்தின: அந்த எளிமையின், அந்த நேர்மையின் ஒரு சிறு பகுதியைக்கூட நான் எப்படி என் வாழ்வில் சம்பாதிப்பது?


சிறை, வறுமை மற்றும் நோக்கம்


அவர் மற்றொரு நிகழ்வையும் நினைவு கூர்ந்தார் — அக்காலத்தில் பெண்கள் மெளனமாக அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஒன்று. சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதையும், திருமணம் என்றால் என்னவென்று அந்தப் பெண் புரிந்துகொள்வதற்கு முன்பே கணவன் இறந்துவிட்டால், அவள் வாழ்நாள் முழுவதும் விதவையாக்கப்படுவதையும் பற்றிப் பேசினார். வெள்ளை ஆடை உடுத்தப்பட்ட அந்தச் சிறுமிகள், குடும்ப விழாக்களின் போது ஒரு மூலையில் அமர வைக்கப்படுவார்கள் — மகிழ்ச்சி, உணவு, சிரிப்பு என அனைத்தும் மறுக்கப்பட்டவர்களாக, வாழ்க்கை அவர்களுக்காக முடிந்துவிட்டது போல் நடத்தப்படுவார்கள்.


ree

கிருஷ்ணம்மாளின் வழிகாட்டியான டி.எஸ். சௌந்தரம், இந்தக் குழந்தை விதவைகளை அத்தகைய கொடூரத்திலிருந்து விடுவிக்க அயராது உழைத்ததை அவர் பகிர்ந்துகொண்டார் — அவர்களுக்குக் கல்வியையும், ஒரு நோக்கத்தையும், தங்கள் தன்மானத்தை மீட்டெடுக்கும் துணிவையும் அளித்தார். சௌந்தரத்துடன் பணியாற்றியது தன்னை ஆழமாக வடிவமைத்ததாக அவர் கூறினார் — செயலில் கருணையையும், ஒரு சமூகத்தின் மெளனத்தை கேள்வி கேட்கத் தேவையான வலிமையையும் அது அவருக்குக் கற்பித்தது.

பிறகு ஒரு கணம் நிறுத்தினார் — அவர் கண்கள் எங்கோ வெறித்தன, குரல் மெல்லியது — காலத்தின் சன்னல் வழியாகப் பின்னோக்கிச் செல்வது போல. சுதந்திரப் போராட்டத்தின் கடினமான ஆண்டுகளில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்; அது வரலாற்றுப் புத்தகங்களில் அல்ல, அதை வாழ்ந்தவர்களின் எலும்புகளில் பொறிக்கப்பட்ட கதை.


டி.எஸ். சௌந்தரம் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்தார் — மூவருக்கும் பகிர்ந்துகொள்ள ஒரு கைப்பிடி உணவும், சிறுநீர் கழிக்க ஒரு சிறு பாத்திரமும் மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகள் இப்படி ஒரு வாழ்க்கை — ஆனாலும், அவர் கசப்புணர்வோடு வெளிவரவில்லை, மாறாக கருணையின் பேரொளியாக வெளிவந்தார்.

அவர் சொன்ன ஒன்று இன்னும் என் மனதில் எதிரொலிக்கிறது:

“பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியதை நாம் சுதந்திரம் என்றோம். ஆனால், இந்தியாவில் வறுமை இருக்கும் வரை, இங்கு சுதந்திரம் இல்லை. பெண்களுக்கு நிலம் கிடைத்தால், அவர்கள் தங்கள் மண்ணில் உழைத்து, சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழ்ந்து, தன்னிறைவு அடைவார்கள். அதற்காகத்தான் நான் உழைக்கிறேன் — இதுவரை, 500 பெண்கள் சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்க, 1,000 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தர என்னால் முடிந்தது.”

அவர் வார்த்தைகளில் தற்பெருமை இல்லை, உண்மையைத் தவிர. அவை இன்றைய சாதனைகளின் ஆரவாரங்களைக் கடந்து, உண்மையான சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதை எனக்கு நினைவூட்டின — அது ஒரு அரசியல் மைல்கல் அல்ல, ஒரு தார்மீக மைல்கல்.

ree

அன்பும், செய்யும் தொழிலின் திறமை மற்றும் மேன்மையும்


அந்த உண்மை என்னுடன் தங்கியது. மற்ற எல்லா விழுமியங்களுக்கும் (கொள்கைகளுக்கும்) அடித்தளமாக நான் ஏன் அன்பு, செய்யும் தொழிலின் திறமை மற்றும் மேன்மை என்ற இரண்டை வைத்தேன் என்பதை அது எனக்கு நினைவூட்டியது.


செய்யும் தொழிலின் திறமை மற்றும் மேன்மை இல்லாமல், அன்பு மட்டும் நம்மை இரக்கமுள்ளவர்களாக ஆக்கும், ஆனால் வலிமையற்றவர்களாக விட்டுவிடும் — வலிமையற்ற தூய உள்ளங்கள்.


அன்பு இல்லாமல், செய்யும் தொழிலின் திறமை மற்றும் மேன்மை இரக்கமற்றதாகிவிடும் — கருணையற்ற அறிவார்ந்த உள்ளங்கள். ஆனால் அவை இரண்டும் இணையும்போது, அன்பு நம் நோக்கத்தைச் செம்மைப்படுத்துகிறது, செய்யும் தொழிலின் திறமை மற்றும் மேன்மை நம் முயற்சிக்கு மாண்பளிக்கிறது.


ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு


ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எதையோ சாதித்துவிட்டதாக உணரவில்லை — என் நோக்கத்தோடு நான் ஒன்றிணைந்திருப்பதாக உணர்கிறேன். சத்தம் அதிகமாகவில்லை, ஆனால் தெளிவு கூடியிருக்கிறது.


இன்னும் நடக்கிறேன்… இன்னும் கற்கிறேன்… எனக்குள் தொடங்கும் ஒரு விடுதலையை நோக்கி, அது நான் உருவாக்கும் ஒவ்வொன்றின் வழி பரவட்டும்.


🎥 இந்த மறக்க முடியாத சந்திப்பிலிருந்து ஒரு சிறு காணொளி விரைவில்.

ree

 copyright @ Citizen KK  

bottom of page